திருநெல்வேலி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த வேல் (31) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறி மும்பையில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் ஊர் திரும்பிய வேல் மீது ஆத்திரத்தில் இருந்த சுதாகர் மற்றும் அவரது உறவினர்கள் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர். சம்பவத்தன்று இரவு வேல் தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது, நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் மறைந்திருந்த சுதாகர், அவரது சகோதரர் சுடலைமுத்து மற்றும் நண்பர் இசக்கிமுத்து ஆகியோர் அவரை வழிமறித்தனர்.
இந்நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேலைச் சரமாரியாக வெட்டியதில், அவரது இடது கை மணிக்கட்டு துண்டானதுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
