கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு பகுதியில், செம்மண் குவாரி நடத்துவது தொடர்பான தொழில் போட்டியில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக விவசாய அணி துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றியச் செயலாளர் வினோத் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின் போது, கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால் திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பினரை மிரட்டியுள்ளார்.
துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடுவீரப்பட்டு காவல்துறையினர் கோபால் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், அதைத் தவறான முறையில் பொதுவெளியில் பயன்படுத்தியதற்காகத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான கோபாலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
