புனே மாவட்டம் பாம்பர்தே கிராமத்தில், பெற்ற தாயே தனது 11 மாதக் குழந்தையைப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரவீந்திர பவார் என்பவரின் மனைவி பூஜா பவார், தனது இரண்டாவது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததாலும், குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாலும் ஆத்திரமடைந்துள்ளார். மனிதாபிமானமற்ற முறையில் குழந்தையைச் சிமெண்ட் திண்ணையில் அடித்துக் கொலை செய்த அவர், தடயங்களை மறைக்க இரத்தக் கரைகளைச் சுத்தம் செய்துவிட்டு உடலை ஒரு துணிப்பையில் வைத்துக் கிணற்றில் வீசியுள்ளார்.
குழந்தையைக் காணவில்லை என்று தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் தாயிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உண்மை வெளிவந்தது. இறுதியில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பூஜாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
