தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரத்தில், சட்டவிரோதக் கருக்கலைப்பு மற்றும் பாலினப் பரிசோதனை செய்து வந்த கும்பலைச் சுகாதாரத் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் இந்தப் பயங்கரம் அரங்கேறி வந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவும் காவல்துறையும் இணைந்து நடத்திய இந்த மின்னல் வேக சோதனையில், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெருமளவிலான கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சட்டவிரோதச் செயலின் பின்னணியில் பரிமளா (34) மற்றும் சாந்தி (47) ஆகிய இரு பெண்கள் செயல்பட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது. இதில் பரிமளா செவிலியர் படிப்பு முடித்தவர் என்பதும், தான் கற்ற மருத்துவ அறிவை நல்வழியில் பயன்படுத்தாமல், பணத்திற்காகப் பிஞ்சுயிர்களைப் பலிகொடுக்கத் துணிந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரு குழுவாகச் செயல்பட்டு, தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண் குழந்தை வேண்டாம் என நினைக்கும் பெற்றோர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ரகசியமாகப் பாலினச் சோதனைகளை நடத்தி வந்துள்ளனர்.
தமிழக அரசால் மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படும் பெண் சிசுக்கொலைக்கு வித்திடும் வகையில், இவர்கள் தொடர்ந்து ஆபத்தான கருக்கலைப்பு ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கி வந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் மீது பல புகார்கள் எழுந்து, ஒருமுறை தலைமறைவாகிப் பின் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருந்தாமல் மீண்டும் அதே சட்டவிரோத தொழிலைத் தொடர்ந்த இவர்களை, இம்முறை ஆதாரங்களுடன் பென்னாகரம் போலீசார் கம்பி எண்ண வைத்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கை தர்மபுரி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பலமான எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சங்கிலித் தொடர் கும்பலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும், மாவட்டத்தில் வேறு எங்கும் இது போன்ற கும்பல்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
