முதலமைச்சராக முன் அனுபவம் வேணுமா?… பெண்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு நாஞ்சில் சம்பத் பேசிய ‘அந்த’ பேச்சு… தவெக-விற்கு புதிய சிக்கல்…!!!

By Muthu Mani on சித்திரை 17, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டாக்டர் ரவியை ஆதரித்து அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தனது கல்லூரி காலத்தில் பேராசிரியர் அன்பழகன் தமக்கு ‘நாஞ்சில் சம்பத்’ எனப் பெயர் சூட்டியதை நினைவுகூர்ந்ததுடன், விஜய் இட்ட ஆணையின் பேரிலேயே தாம் பல்வேறு இடங்களுக்குச் சென்று பரப்புரை செய்வதாகக் குறிப்பிட்டார். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், மகாத்மா காந்தி மற்றும் அண்ணாவிற்கு கிடைக்காத இளைஞர் பட்டாளம் இன்று விஜய்க்கு கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பிற அரசியல் கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத், வைகோ தனது கட்சியை அறிவாலயத்தில் அடக்கம் செய்துவிட்டதாகவும், ஜி.கே.வாசன் கட்சியை மோடியிடம் விற்றுவிட்டதாகவும் சாடினார். சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரையும் விமர்சித்த அவர், விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் சீமானின் கட்சி செல்வாக்கு இழந்து வருவதாகக் கூறினார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது 526 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்றும், இது குறித்து கனிமொழியுடன் விவாதிக்கத் தாம் தயார் என்றும் சவால் விடுத்தார்.

   

தமிழகத்தில் நிலவும் மதுப் பழக்கம் குறித்துப் பேசிய அவர், 5239 டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி 70 லட்சம் பேர் மது அருந்துவதாகவும், அண்ணா மது விற்பனையை எதிர்த்த நிலையில் தற்போது மதுக்கூடங்கள் பெருகிவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார். மேலும், உதயநிதியை அடுத்த முதலமைச்சராகக் கொண்டுவரவே திமுகவினர் உழைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மின் உற்பத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ஸ்டாலின் சென்றதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் பேசினார்.

   

விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்குப் பகலிலேயே லட்சக்கணக்கான மக்கள் கூடுவதைச் சுட்டிக்காட்டிய நாஞ்சில் சம்பத், எம்ஜிஆர் 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது போல விஜய் 3 ஆண்டுகளுக்குள்ளேயே ஆட்சியைப் பிடிப்பார் எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், முதலமைச்சராவதற்கு முன் அனுபவம் தேவையில்லை என்பதை விளக்கும்போது, பெண்கள் முகம் சுழிக்கும் வகையில் அருவருக்கத்தக்க உதாரணத்தைக் கையாண்டு அவர் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இறுதியில், வரும் தேர்தல் முடிவுகள் விஜய்யின் வெற்றியையும் மக்களின் மாற்றத்தையும் உறுதி செய்யும் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.