“ஷாக்… லண்டன் கனவு… ஒரு டெலிகிராம் மெசேஜ்…! 5.28 லட்சத்தை பறிகொடுத்த… தஞ்சை பட்டதாரி… பகீர் பின்னணி…!”

By Swetha on ஆடி 17, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரி ஜே.குமரேசனுக்கு டெலிகிராம் செயலி மூலம் லண்டனில் ஸ்டோர் கீப்பர் வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய அவரிடம் நேர்காணல், விசா, மருத்துவக் காப்பீடு மற்றும் குடியேற்றக் கட்டணம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, அடையாளம் தெரியாத மர்ம நபர் ரூ. 5,28,807 தொகையை 6 தவணைகளாக ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் அந்த நபர் தனது செல்போனை அணைத்துவிட்டு ஏமாற்றியதால், குமரேசன் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி தலைமையிலான சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், குமரேசன் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகள் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மோசடி கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

   

மற்றொரு சம்பவத்தில், தஞ்சை கீழ வண்டிக்கார தெருவைச் சேர்ந்த லேத் பட்டறை தொழிலாளி நவீன் குமார் (47) என்பவர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி விடுதி முன்பு குடிபோதையில் மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விடுதி வார்டன் லிங்கேஸ்வரி அளித்த புகாரின் பேரில், தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் குமாரை கைது செய்தனர்.