“காயிதே மில்லத் நினைவிடத்தில் பயங்கர தள்ளுமுள்ளு”… செல்வப்பெருந்தகையை ‘துரோகி’ என விரட்டியடித்த திமுகவினர்… சற்றுமுன் பரபரப்பு…!

By Nanthini on ஆனி 5, 2026

Spread the love

சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அரசு சார்பிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் சிறப்பான முறையில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நல்லிணக்கத்தையும் புகழையும் பரப்பும் வகையில் அவரது பெயரில் அரசு கல்லூரிகளும் நூலகமும் அமைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள காயிதே மில்லத்தின் துயிலிடத்தில் இன்று காலை முதலே அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

   

இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அங்கு வருகை தந்தார். அவர் அஞ்சலி செலுத்த வந்தபோது, அங்கிருந்த திமுகவினர் திடீரென அவரது வருகைக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியினரை நோக்கி திமுகவினர் சிலர் “துரோகி… துரோகி…” என்று உரத்த குரலில் கோஷங்களை எழுப்பியதால், அந்த இடமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

   

இந்தத் திடீர் முழக்கங்களால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் சிறிய அளவிலான தள்ளுமுள்ளுவாக மாறியது. அங்கிருந்த திமுகவினர், “தேர்தல் முடிந்து நன்றி சொல்லக் கூட வரவில்லை, இப்போது எதற்கு வருகிறாயா?” எனக் கூச்சலிட்டுத் தங்களின் அக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த எதிர்பாராத மோதல் போக்கினால் காயிதே மில்லத் நினைவிட வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.

 

இந்த அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்த செல்வப்பெருந்தகை, திமுகவினர் மரியாதை செலுத்திவிட்டுச் சென்ற பிறகு தான் அஞ்சலி செலுத்துவதாகக் கூறி, அங்கு மரியாதை செலுத்தாமலேயே தற்காலிகமாக வெளியேறினார். அவர் சென்றதைத் தொடர்ந்து, அங்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.