மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கணவனால் கைவிடப்பட்ட விரக்தியில் தாய் ஒருவர் தனது நான்கு பெண் குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்திரபன் லோதி என்பவரது மனைவி சவிதா, ஆண் குழந்தை இல்லை என்ற காரணத்திற்காகத் தன் கணவனால் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வந்த சவிதா, கடுமையான நிதி நெருக்கடியிலும் மன உளைச்சலிலும் இருந்த நிலையில், தனது பிள்ளைகளைத் தனித்து வளர்க்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளில் மூத்த மகளுக்கு ஏழு வயது என்றும், கடைசி குழந்தைக்கு வெறும் ஐந்து மாதங்களே ஆகிறது என்பதும் சோகத்தை அதிகப்படுத்துகிறது.
இந்த சவிதா தனது நான்கு மகள்களையும் கிராமத்திலுள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, பின்னர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஐந்து பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வறுமை மற்றும் குடும்பப் தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
