கேரளாவில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, நர்ஸ் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த பாதிரியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த சாம் ஹார்ட் என்பவர், இரிஞாலக்குடாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார்.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறைக்காக ஊருக்கு வந்தபோது அவருக்கும் பாதிரியார் சாம் ஹார்ட்டுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சாம் ஹார்ட், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பல்வேறு காரணங்களைக் கூறி அந்த நர்ஸிடமிருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அதன் பிறகு சொன்னபடி அவரைத் திருமணம் செய்யாமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இரிஞாலக்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியார் சாம் ஹார்ட்டைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
