உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் உமார்தா ஒன்றியத்தில் உள்ள சிக்ரோரி ஒருங்கிணைந்த அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பு நேரத்தில் வகுப்பறையிலேயே நிம்மதியாகத் தூங்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடமை நேரத்தில் பாடமெடுக்க வேண்டிய ஆசிரியர் தூங்கிக் கொண்டிருக்க, வகுப்பறையில் இருந்த சிறுவர்கள் படிப்பைக் கவனிக்காமல் கைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளிக்கூடத்தை வெறும் ஓய்வெடுக்கும் இடமாக ஆசிரியர் மாற்றியதும், அவருக்கு அச்சமின்றி மாணவர்கள் வகுப்பறையிலேயே மொபைல் போன்களைப் பயன்படுத்தியதும் அரசுப் பள்ளிகளின் நிலையைக் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. ஆசிரியரின் இந்த பொறுப்பற்ற செயலால் மாணவர்களின் எதிர்காலமும், கற்றல் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
https://twitter.com/priyarajputlive/status/2084479438058926497/video/1
இச்சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் செயல்பாடு குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. கல்வித்துறையின் அலட்சியப்போக்கைச் சுட்டிக்காட்டும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தைச் சீரமைக்க உரிய வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
