தமிழகத்தில் கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசனின் மனைவி சிவரஞ்சனி, திருச்சியை சேர்ந்த நிஷா, கடலூரைச் சேர்ந்த கௌசல்யா, கள்ளக்குறிச்சி சேர்ந்த பூவிழி ஆகியோர் ஒரே காரில் செல்ல முடிவெடுத்தனர்.
இவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் வந்த காரை சூர்யா என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரில் நிஷாவின் கணவர் ஷாகுல், கௌசல்யாவின் கணவர் எல்லப்பன், பூவிழியின் கணவர் முருகன் ஆகியோரும் இருந்தனர். இந்த நிலையில் அய்யூர் அகரம் என்ற இடத்தில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் சூர்யா காரை எதிர் திசை சாலையில் திருப்பினார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சாகுல், ஆசிரியை சிவரஞ்சனி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆசிரியராக பணியில் சேர்ந்து பத்து நாட்களில் சிவரஞ்சனி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
