“வெரி ராங் ப்ரோ.. பட்ஜெட்ல ‘வெற்றி’ போட்டா மட்டும் போதாது”…. CM விஜய்யை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை…!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடித்துள்ள ‘செய்… செய்யாதே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். போதைப்பொருள் தடுப்பு மற்றும் மருத்துவத் துறை தவறுகளைச் சுட்டிக்காட்டும் திரைப்படம் என்பதால் மருத்துவரான தான் இதில் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், திரையுலகினர் அரசியலுக்கு வரும் இக்காலத்தில், அரசியல்வாதிகள் நடிப்பதற்கு வரும் சூழலும் உருவாகியுள்ளது என்று சுவாரசியமாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது ‘விஜய் என்றால் வெற்றி’ எனக் குறிப்பிட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, “எங்களைப் பொறுத்தவரை மோடி என்றாலும் வெற்றிதான்; தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காக அரசு அறிவிக்கும் 150 திட்டங்களுக்கும் ‘வெற்றி’ எனப் பெயரிட்டுத் தன் கட்சியை நிலைநிறுத்த முனைவது தவறான அணுகுமுறை” எனக் விமர்சித்தார். மேலும், தமிழக அரசின் புதிய பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும், தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மேம்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

   

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பில்லை என்பதைச் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் உணர்த்துவதாகத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்து மதத்தை இழிவாகப் பேசியதற்காகச் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட உள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், எந்தவொரு மதத்தையும் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்றும், மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

   

தமிழகத்தில் இந்துக்களின் மத உணர்வுகள் தொடர்ந்து பாரபட்சமாக அணுகப்படுவதாகக் குற்றம்சாட்டிய தமிழிசை, மாநிலத்தில் மதச்சார்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான சம்பவங்கள் நடப்பதாகக் கவலை தெரிவித்தார். வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதி கோயிலில் வைத்துப் பூஜித்தபோது எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்தபோது அமைதி காத்தது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், இரட்டை நிலைப்பாட்டைத் தவிர்த்து அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.