தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள x பதிவில், “இன்று தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்களுக்காக முழுமையான வசதி இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். நான் எப்போதெல்லாம் நிர்வாகத்தில் இருந்தேனோ அப்போதெல்லாம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தனி கவனம் செலுத்தி இருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் கூட எந்த ஒரு பற்றாக்குறை இல்லாமலும் பார்த்துக் கொண்டேன். தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட நம்பிக்கையோடு சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.
கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை கோடியில் வாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆதங்கம். புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்ட போது கூட நான் அரசு மருத்துவமனைக்கு சென்று போட்டுக் கொண்டேன். அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய ஆதங்கம். எல்லோர் உடல்நலனும் ஒன்றுதான். எல்லோரும் இதயமும் தன் குடும்பத்திற்காக தான் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏழையின் இதயத்திற்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அரசு மருத்துவமனையில் கிடைக்கவில்லை என்பதுதான் என்னுடைய ஆதங்கம். அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முதல்வரும் சொல்லும் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
