“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரத்தில் ரெட் அலெர்ட்”…. TRB ராஜா வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்…. அதிர்ச்சி தரும் GST புள்ளிவிவரம்…!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை குறித்த பெரும் கவலையை உருவாக்கியுள்ளன. கடந்த மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை வரி வருவாய் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் சூழலில், தமிழகத்தின் வருவாய் இயந்திரம் தற்போது ‘சிவப்பு எச்சரிக்கை’ காட்டுவதாக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா சுட்டிக்காட்டியுள்ளார். இதே நிலை நீடித்தால், மாநில அரசு தன் அன்றாடச் செலவுகளைக் குறைப்பதா அல்லது இலக்குகளை அடைவதற்காக மேலும் கடன் வாங்குவதா என்ற மிகக்கடினமான நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் மாத நிதியறிக்கை விவரங்களின்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் ₹10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ₹10,189 கோடியாகக் குறைந்துள்ளது. இது 1 சதவீத சரிவைக் குறிக்கிறது. ஆனால், இதே காலகட்டத்தில் தேசிய அளவில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா (+13%), தெலங்கானா (+16%), மகாராஷ்டிரா (+8%), குஜராத் (+15%) மற்றும் உத்தரப் பிரதேசம் (+19%) ஆகிய மாநிலங்கள் கணிசமான நேர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் சரிவை நோக்கிச் சென்றுள்ளது சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாத ஒரு முக்கிய எச்சரிக்கையாகும்.

   

சாதாரண மக்களுக்கு இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பற்றிய கவலை ஏன் இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் டிஆர்பி ராஜா விரிவாகக் விளக்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38 சதவீதம் மாநில ஜிஎஸ்டி (SGST) மூலமாகவே வருகிறது. மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, சாலைகள் அமைத்தல் மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையில், அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இந்த இரு கணக்குகளும் சரியாக வர வேண்டுமானால் அரசின் வரி வருவாய் தொடர்ந்து உயர வேண்டும், ஆனால் தற்போதைய எதிர்மறை வளர்ச்சி அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

   

ஒரு மாத புள்ளிவிவரத்தைக் கொண்டு முழு ஆண்டின் போக்கையும் தீர்மானிக்க முடியாது என்றாலும், சக போட்டியாளராக விளங்கும் பிற மாநிலங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் போது தமிழ்நாடு மட்டும் பின்னடைவைச் சந்திப்பது ஏன் என்ற கேள்வி வலுத்து வருகிறது. வருவாய் போதிய அளவு இல்லாவிட்டால் பட்ஜெட் என்பது வெறும் காகிதக் கணக்காக மட்டுமே எஞ்சும். எனவே, இந்த 1 சதவீத ஜிஎஸ்டி சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதற்கு முன்பாகவே அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த நிதிச் சரிவிற்கான உண்மை காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.