“ரூ.18,000 கோடி பட்ஜெட்… 1.86 கோடி மக்கள்”… தமிழக வரலாற்றிலேயே இல்லாத பிரமாண்ட திட்டம்… மத்திய அரசுடன் கைகோர்த்த முதல்வர் விஜய்….!

By Nanthini on ஆனி 3, 2026

Spread the love

தமிழக கிராமப்புற மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், ‘உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தமிழ்நாடு அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. நேற்று (2.6.2026) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்தும், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் டெல்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டனர். இந்த நீட்டிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் மூலம், முதற்கட்டமாக தமிழக அரசுக்கு ரூ.2,177.27 கோடி நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெறவுள்ளது.

   

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு தற்போது இத்திட்டத்தின் செயலாக்கக் காலம் வரும் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. அந்த முதற்கட்டத் திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பீடு ரூ.18,123.05 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்காக ரூ.9,025.68 கோடியும், தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.9,097.37 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் தொய்வின்றி அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

   

இத்திட்டத்தின் கீழ் இதுவரை தமிழ்நாட்டில் சுமார் 46.71 இலட்சம் வீடுகளுக்குச் செயல்பாட்டு நிலையிலான குழாய் இணைப்புகள் (FHTC) வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.86 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மற்றும் 21,258 ஒற்றைக் கிராமத் திட்டங்கள் ஆகியவை மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கையெழுத்தாகியுள்ள 2.0 புரிந்துணர்வு ஒப்பந்தம், விடுபட்ட மற்றும் புதிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவும்.

 

மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள அனைத்துக் கிராமப்புறக் குடும்பங்களுக்கும் போதுமான குடிநீரைத் தடையின்றி வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் கொண்டுள்ள கூட்டுப் பொறுப்பையும், தொடர் உறுதியையும் இந்த ஒப்பந்தம் மீண்டும் பறைசாற்றுகிறது. டெல்லியிலிருந்து காணொலி மூலம் இணைந்த மத்திய இணை அமைச்சர் வி. சோமன்னா, ஜல்சக்தி அமைச்சகச் செயலாளர் அசோக் கே.கே. மீனா மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். ஜெயா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் சுமுகமாக நிறைவு பெற்றது.