ஆன்லைன் பொருட்களை விநியோகிக்கக்கூடிய தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு 20,000 மானியம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதார சூழலில் இணையம் சார்ந்த சேவை பணிகளில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இந்த தொழிலாளர்களின் நலனுக்காக இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 2000 பேருக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு தலா ₹20,000 மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இணையம் சார்ந்த சேவை பணிகளில் ஈடுபடும் 2000 பேருக்கு 20000 ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்திற்கு நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
