தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், மக்களை தேடி மறுத்து ஆய்வாக திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்த பொருட்செலவும் இல்லாமல் முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் சிறப்பு மருத்துவ வசதிகளோடு பெரிய அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
master health checkup என்று சொல்லக்கூடிய முழு உடல் பரிசோதனை மக்களைத் தேடி, மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக 862 மருத்துவ முகாம்கள் 12.78 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் விதமாக 2025 ஜூன் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு தமிழகத்தில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
