2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய ‘ஆக்சிஸ் மை இந்தியா’ (Axis My India) நிறுவனத்தின் எக்ஸிட் போல் முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே சுமார் 98 முதல் 120 தொகுதிகள் வரை கைப்பற்றி, திமுகவை பின்னுக்குத் தள்ளி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக இந்த கணிப்பு தெரிவிக்கிறது. திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களைப் பெறக்கூடும் என்றும், தவெக தனித்தே ஆட்சியமைக்கும் சூழல் நிலவுவதாகவும் கூறப்படுவது அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுமே தலா 35 சதவீத வாக்குகளைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வலுவான நிலையில் இருந்த அதிமுக, இந்த தேர்தலில் வெறும் 23 சதவீத வாக்குகளுடன் 22 முதல் 32 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளையும், இதர கட்சிகள் 4 சதவீத வாக்குகளையும் பெறும் என இந்த ஆய்வு கூறுகிறது. நீண்டகாலமாக நிலவி வந்த இருமுனைப் போட்டி என்பது மாறி, தற்போது புதிய அரசியல் சக்தியின் வருகையால் களம் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், வாக்காளர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் பதிவான வாக்குகள் தான். குறிப்பாக, உயர்கல்வி பயின்ற இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெரும் ஆதரவு தவெக பக்கம் திரும்பியுள்ளது. பட்டதாரிகளில் 46 சதவீதம் பேரும், தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்களில் 51 சதவீதம் பேரும் விஜய்யின் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், பள்ளிக்குச் செல்லாதவர்கள் மற்றும் ஆரம்பக் கல்வி பயின்றவர்களிடையே திமுக இப்போதும் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, படித்த வாக்காளர்களின் ஆதரவை கணிசமாக இழந்துள்ளதை இந்த தரவுகள் காட்டுகின்றன. பட்டதாரிகளிடையே அதிமுகவின் வாக்கு சதவீதம் 18 ஆகக் குறைந்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தரப்பு மக்களிடமும் 2 முதல் 5 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தமிழகத்தின் படித்த இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதையே இந்த எக்ஸிட் போல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. முடிவுகள் உண்மையானால், தமிழக அரசியல் வரலாறு ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகரும் என்பதில் ஐயமில்லை.
