தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையிலான அரசு, 2026-2027ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிதியமைச்சர் வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இதற்கான இறுதிக்கட்ட பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதிய திட்டங்கள், தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு திட்டங்களை இறுதி செய்து வருகிறார்.
இந்த முதல் பட்ஜெட்டில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், திருமண நிதியுதவியாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கும் திட்டங்கள் இதில் பிரதானமாக இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கடன் உதவிகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
கல்வி மற்றும் சமூக நலத் துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல புதிய அறிவிப்புகளை வெளியடவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துவதுடன், அரசுக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் 8,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இவற்றுடன் 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றுவது, பள்ளி மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள்களுக்கு முழு நிதி நல்கை வழங்குவது, பனை மரத்தைப் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிப்பது மற்றும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பது போன்ற முக்கிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது.
