தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வாரத்திற்கு நான்கு திரைப்படங்கள் ஆவது திரையரங்குகளில் வெளியாகி விடுகின்றன. அதனால் சராசரியாக ஆண்டுக்கு 200 திரைப்படங்கள் ஆவது வெளியாகிறது. இந்த திரைப்படங்களின் வெற்றி தோல்வி தான் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நிர்ணயம் செய்கின்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரிலீசான படங்கள் ஏராளமானவை பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. தமிழ் சினிமாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு அமரன், மகாராஜா மற்றும் கருடன் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஏமாற்றமான ஆண்டாக 2024 அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
2024 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சுமார் 3000 கோடியை படங்களில் முதலீடு செய்து செலவிட்டனர். ஆனால் இறுதியில் அவர்கள் சுமார் 1000 கோடி நஷ்டத்தை தான் அடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழில் வெளியான 241 படங்களில் சுமார் 18 திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மீதமுள்ள 223 படங்கள் தோல்வி அடைந்தன. 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆயிரம் கோடி அளவில் நஷ்டம் அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் பெரிய ஹீரோக்களின் படங்கள் மக்களிடம் சொதப்பியதுதான். கமல்,ரஜினி மற்றும் சூர்யா போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்க்காத விதமாக பெரும் தோல்வியை சந்தித்தனர். சூர்யாவின் கங்குவா திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 106 கோடி மட்டுமே வசூல் செய்தது. அதனைப் போலவே சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த படம் வெறும் 150 கோடி மட்டுமே வசூல் செய்தது. அதனைப் போலவே ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட பல பெரிய படங்களை பார்வையாளர்கள் விமர்சித்து படத்தை புறக்கணித்த நிலையில் வசூலில் பெரும் அடி வாங்கியது. விஜயின் கோட் திரைப்படம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
![]()
2024 ஆம் ஆண்டில் கருடன், லப்பர் பந்து, டிமான்டி காலனி 2, வாழை போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தந்தன. இப்போது வெளியாக கூடிய படங்கள் எல்லாம் கதையின் தாக்கத்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகின்றன. சமீபத்தில் கூட விஷால் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு கோடியில் இருந்து நான்கு கோடி ரூபாய் வரை படம் எடுக்க நினைப்பவர்கள் தயவு செய்து அந்த பணத்தை வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வையுங்கள். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
