மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க விண்ணப்பித்தால் அது மனிதத் தலையீட்டுடன் கூடிய மேனுவல் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, பணம் கிடைக்கப் பல நாட்கள் தாமதமானது. தற்போது இந்த வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தகுதியுடைய விண்ணப்பங்களுக்கு எவ்வித மனிதத் தலையீடும் இன்றி கணினி மூலமாகவே தானியங்கி முறையில் ஒப்புதல் அளிக்கப்படும்.
இந்த புதிய ஆட்டோ செட்டில்மென்ட் முறை மூலம் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கிற்கு 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் மிக வேகமாகப் பணம் மாற்றப்படும். நோய் சிகிச்சை, திருமணம், கல்வி மற்றும் வீடு கட்டுதல் போன்ற அவசரக் காரணங்களுக்காகப் பணம் கோருபவர்களுக்கு இந்த வசதி பெரிதும் உதவிகரமாக இருக்கும். மேலும், 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போதைய முன்பண ஆட்டோ செட்டில்மென்ட் முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெறும் இறுதி பிஎஃப் தொகையையும் (Final Withdrawal) இதேபோல முழுமையாகத் தானியங்கி முறையில் செட்டில்மென்ட் செய்வதற்கான தொழில்நுட்பப் பணிகளை EPFO விரைவுபடுத்தி வருகிறது.
இந்த அதிவேக ஆட்டோ செட்டில்மென்ட் வசதியைப் பெற ஊழியரின் யுஏஎன் எண் ஆக்டிவேட் செய்யப்பட்டு, ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், பிஎஃப் கணக்கில் பான் கார்டு விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாகப் புதுப்பிக்கப்பட்டிருப்பது அவசியமாகும். ஆன்லைன் போர்ட்டலில் சுய சான்றளிப்பு மூலம் விண்ணப்பிக்கும்போது, நிறுவனத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. வேலை மாறும்போது பிஎஃப் கணக்குகளைப் புதிய நிறுவனத்திற்கு மாற்றும் நடைமுறையையும் எளிதாக்கி, ஊழியர்கள் படிவம் சமர்ப்பிக்காமலேயே தானாகவே கணக்குகள் புதிய கணக்கோடு இணையும் ‘ஆட்டோ மைக்ரேஷன்’ வசதியும் கொண்டுவரப்பட உள்ளது.
