அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசத் தொடங்கியபோது, சுமார் 200 மாணவர்கள் திடீரென அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது, மாணவர்கள் “பாலஸ்தீனத்திற்கு விடுதலை” என்று முழக்கமிட்டபடி வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
கூகுள் மற்றும் அமேசான் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இஸ்ரேல் நாட்டுடன் ‘ப்ராஜெக்ட் நிம்பஸ்’ என்ற 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பங்கள் பாலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவத்திற்கு உதவக்கூடும் என்றும், போரை வைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன என்றும் குற்றம் சாட்டியே மாணவர்கள் இந்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்த வெளிநடப்பு சம்பவம் குறித்து, விழா முடிவில் செய்தியாளர்கள் சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், மாணவர்களின் இந்தத் தொடர் போராட்டங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவொரு பதிலும் அளிக்காமல் அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.
