தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி 6 மாதங்கள் கூட தாங்காது என திமுகவினர் தொடர்ந்து கூறி வந்த சூழலில், சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க தவெக எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தர ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, நரேஷ் உட்பட 8 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் முன்னாள் அமைச்சரும், திமுகவின் கோவை தெற்கு தொகுதி தற்போதைய எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் பின்னணியில் செந்தில் பாலாஜியும் அவரது தம்பியும் இருப்பதாக எம்எல்ஏ இளையராஜாவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். கரூரில் உள்ள அவர்களின் பூர்வீக கிராமமான ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பெற்றோரிடம் இந்த சம்மன் முறைப்படி வழங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இந்த சம்மனின்படி, செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக் குமாரும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக, பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னரே கைது செய்யப்படுவது வழக்கம் என்பதால், இந்த விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு இன்னும் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சம்மன் வழங்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி இதுவரை முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடவில்லை. இன்று சனிக்கிழமை பாதி நாள் முடிவடைந்துவிட்டதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற விடுமுறை என்பதாலும், திங்கட்கிழமை காலையிலேயே அவர்கள் ஆஜராக வேண்டியுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி உடனடியாக நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தாலும், அது திங்கட்கிழமை காலைக்குள் விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என்பதால், இந்த சம்மன் விவகாரம் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சட்டரீதியாகப் பெரும் முட்டுக்கட்டையையும், அரசியல் ரீதியாகப் பெரும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
