போர் நிறுத்தம்..? அமெரிக்கா – ஈரான் திடீர் உடன்பாடு… பாக். பிரதமர் சொன்ன அதிரடித் தகவல்… பின்னணி என்ன…?

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் அமெரிக்காவும் ஈரானும் மிக நெருங்கி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடங்கிய இந்தப் போர், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதியையும் உலுக்கியதுடன் பாரசீக வளைகுடாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடப்பு வாரத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மூன்று நாட்களாகப் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவும் ஈரானும் “இறுதியான, ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை” எட்டியுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அமைதி ஒப்பந்தம் “இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த ஒப்பந்தத்தின் வாசகங்களை இரு நாடுகளும் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தம் கிட்டத்தட்ட கையெழுத்தாகும் சூழல் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

   

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அமைதி முயற்சியை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியின் அந்தப் பதிவை தனது சொந்த சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வல்லரசு நாடுகளின் இந்த முக்கிய நகர்வு, பல மாதங்களாகப் பதற்றத்தில் இருக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி திரும்புவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.