10 கிலோமீட்டர் அதிகமான தூரம் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று அரசு தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், “2025 வருடம் பிளஸ் டூ தேர்வுக்கான ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட கருத்துரிமை அனுப்பி இயக்குனரின் ஆணை பெற வேண்டும். புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் விதிகளின்படி தகுதியுள்ளதா என்று உறுதி செய்த பிறகு அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும்.
அவ்வாறு விதிகளின்படி இல்லாத பள்ளிகளை பரிந்துரைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் பயணம் செய்து பொதுதேர்வு எழுத தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு மையத்திற்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
