கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், தூங்கிக்கொண்டிருந்த சக மாணவர்கள் மீது சக மாணவன் ஒருவன் இரும்புக் கம்பியால் கொடூரமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவை முடித்துவிட்டு மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஏழு மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய மாணவன் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்துத் தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. சுமன் பென்னேகர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். மாணவன் எதற்காக இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டான் என்பது இதுவரை தெரியவில்லை. தப்பியோடிய மாணவனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி விடுதியில் நடந்த இந்தத் துயரமான நிகழ்வு மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
