போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் சிறப்புக்கல்வி ஆசிரியை மிஷெல் மெர்கோக்லியானோவிற்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 36 வயதான இவர், கோனஸ்டோகா உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தபோது, 16 வயது மாணவன் ஒருவனுடன் உடலுறவு கொண்டதையும், அவனுக்குக் கஞ்சா வழங்கியதையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் தனது பணியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது இந்த அதிர்ச்சியூட்டும் குற்றச்செயல் 2025 பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, மிஷெல் தான் வாங்கிய மருத்துவக் கஞ்சாவை அந்த மாணவருக்குக் குறைந்தது 15 முறையாவது வழங்கியுள்ளார். அவர்கள் இருவரும் உடலுறவு கொள்வதற்கு முன்பு கஞ்சா புகைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்களின் பெரும்பாலான பாலியல் சந்திப்புகள் வெய்ன் பகுதியில் உள்ள மிஷெலின் பெற்றோரின் இல்லத்தில் இருக்கும் படுக்கையறையிலேயே நிகழ்ந்துள்ளன. அங்கு அவர்கள் குறைந்தது 12 முறை உடலுறவு கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அந்த மாணவன் தனக்கும் ஆசிரியைக்கும் இடையே இருந்த பாலியல் உறவு குறித்துத் தன் சகோதரியிடம் கூற, அவர் பெற்றோரிடம் விஷயத்தைக் கொண்டு சென்றதை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் ஆசிரியை மிஷெலுக்கு பென்சில்வேனியா மாநில சிறையில் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர் ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், 25 ஆண்டுகளுக்கு “இரண்டாம் நிலை பாலியல் குற்றவாளி”யாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தண்டனையின் விளைவாக, மிஷெலின் ஆசிரியர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர் தனது நன்னடத்தை காலத்தில் குழந்தைகளுடன் தொடர்புடைய எந்தப் பணிகளிலும் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
