ஆந்திர மாநிலம் நந்திகாம மண்டலத்திற்குட்பட்ட ஐதவரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கங்கினாடப்பில் செயல்பட்டு வரும் சரத் சந்திரா ஐஏஎஸ் அகாடமியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த அகாடமி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கங்கினாடப் காவல்துறையினர், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உய்யூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துச் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவியின் இந்தத் தீவிர முடிவிற்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
