வட துருவப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள நார்வே நாட்டின் லாங்கியர்பியன் என்ற நகரத்தில், மனிதர்கள் இறப்பதற்கும் உடல்களைப் புதைப்பதற்கும் சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் நிலவும் உறைபனி மற்றும் கடுமையான குளிர்காரணமாக, இங்குப் புதைக்கப்படும் மனித உடல்கள் இயற்கையாக மக்கிப் போகாமல் பல ஆண்டுகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடல்களில் இருக்கும் ஸ்பானிஷ் ஃப்ளூ போன்ற ஆபத்தான வைரஸ்கள் அழியாமல் மீண்டும் பரவி, பொதுமக்களுக்குப் பெரும் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக, சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 1950-ஆம் ஆண்டு முதல் அங்கு உடல்களைப் புதைப்பதற்கு அந்நாட்டு நிர்வாகம் முழுமையாகத் தடை விதித்தது. இந்த விதிமுறையின்படி, அந்த நகரில் யாரேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வயது முதிர்வின் காரணமாக மரணத்தின் விளிம்பிற்குச் சென்றாலோ, அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காகவும் இறுதிச் சடங்குகளுக்காகவும் நார்வேயின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், பிரசவ நிலையை அடையும் கர்ப்பிணிப் பெண்களும் பிரசவத்திற்கு முன்பே பிரதான நிலப்பரப்பிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
