உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த பிரபல ஹிஸ்டரி ஷீட்டர் ஆதித்யா பிரதான் என்பவனை, அனுஷ்கா என்ற இளம்பெண் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே காதலிக்க மறுத்துள்ளார். இதற்கிடையே, அனுஷ்காவின் கையில் ‘ஆரியன்’ என்ற பெயர் டாட்டூ குத்தப்பட்டிருந்ததையும், இன்ஸ்டாகிராம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ஆரியன் என்பவருடன் அவர் நட்பில் இருந்ததையும் அறிந்த ஆதித்யா, தன்னைக் கேலி செய்வதற்காகவே இவ்வாறு செய்வதாக எண்ணிக் கடுமையான ஆத்திரமடைந்துள்ளார். திருமணத்திற்கு அனுஷ்கா சம்மதிக்காததால், பிரபல சல்மான் கும்பலைச் சேர்ந்த ஷாவேஸ் என்பவனிடம் துப்பாக்கி வாங்கி அனுஷ்காவை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளான்.
அதன்படி, டியூஷன் வகுப்பை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய அனுஷ்காவை வழிமறித்த ஆதித்யா, அவரைத் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தலையில் பாய்ந்த குண்டுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனுஷ்காவுக்கு தீவிர அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்திய ஆதித்யா பிரதான் மீது ஏற்கனவே கொலை முயற்சி, கொள்ளை, துப்பாக்கிச் சட்டம் மற்றும் குண்டாஸ் போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
