பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம், இயக்குநர் ராஜமௌலி இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றார். இவரது படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி அதிக வசூலைக் குவித்தன. தற்போது அவர், நடிகர் மகேஷ்பாபுவை வைத்து பிரம்மாண்டமான வாரணாசி என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி முதல் ரூ. 1200 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. சமீபத்தில் வெளியான இதன் டைட்டில் டீசரில், ராமாயண யுத்தம் நடந்த காலத்தைக் குறிக்கும் காட்சிகள் இருந்ததால், கதை டைம் லூப் பாணியிலோ அல்லது ராமாயணத்துடன் தொடர்புடையதாகவோ இருக்கலாம் என ரசிகர்கள் கருதினர்.
தற்போது கசிந்துள்ள தகவலின்படி, இந்தக் கதை பல ஜென்மங்களுக்கு முன் ராமனாக இருக்கும் மகேஷ் பாபு, பல ஜென்மங்கள் கழித்து மனிதனாகப் பிறந்து சிவனாக அவதாரம் எடுப்பது போலவும் ராஜமௌலி கதையை அமைத்துள்ளாராம். டீசரில் மகேஷ்பாபு சூலாயுதம் ஏந்தி காளை மாட்டில் வருவது போன்ற காட்சிகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.
மேலும், ராமனாக இருந்த மகேஷ்பாபுவைத் தாக்க, ராவணனாக இருந்த பிருத்விராஜ் மறு ஜென்மம் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக ஆன்மீகக் கருப்பொருளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிக வசூலைக் குவிப்பதால், ‘வாரணாசி’ திரைப்படம் ரூ. 2000 கோடி வசூலைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
