தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதேபோன்று அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து, இந்த 5 தொகுதிகளில் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசுப் பணம் வீணாகச் செலவிடப்படும் என்றும் ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் உருவாகும் அரசியல் சாசனச் சிக்கல் ஏற்படும் என்றும் கூறி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, இடைத்தேர்தல் நடத்தத் தடை விதித்து தேர்தல் ஆணையம் மற்றும் முதல்வர் உள்ளிட்டோருக்குப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக வழங்கப்பட்ட இடைக்காலத் தடை காலம் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாகத் தவெக அரசுத் தரப்பில் இடைக்காலத் தடையை நீக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற அமர்வு, தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற இடைக்காலத் தடையை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த நீதிமன்ற உத்தரவின்படி, இடைத்தேர்தலுக்கான தடை செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காலியாக உள்ள அந்த 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உடனடி இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் சாத்தியக்கூறுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
