நகைச்சுவை உலகில் தற்போதைய கலைஞர்கள் சிலரின் செயல்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியனும், பிக் பாஸ் சீசன் 19-ன் இரண்டாவது ரன்னர்-அப்புமான பிரணீத் மோரே தனது நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ஏற்கனவே மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது மற்றொரு நகைச்சுவை கலைஞர் மதுர் விர்லி என்பவரின் 2024-ஆம் ஆண்டு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ‘லவ் அண்ட் லேடெக்ஸ்’ என்ற அவரது பழைய நிகழ்ச்சியின் கிளிப் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், நகைச்சுவை என்ற பெயரில் இதுபோன்ற அருவருப்பான செயல்களை நிறுத்தக் கோரியுள்ளார்.
அந்த வீடியோவில், மதுர் விர்லி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற மிகவும் உணர்வுப்பூர்வமான, கொடூரமான குற்றங்களை நகைச்சுவை என்ற பெயரில் கொச்சைப்படுத்தியுள்ளார். வன்கொடுமைக்கு ஆளாகும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியையும், குற்றவாளியின் மனநிலையையும் கிண்டல் செய்யும் விதமாக அவர் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தள பயனர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “இவர்கள் எந்த மாதிரியான நகைச்சுவையை நோக்கிச் செல்கிறார்கள்? மனிதநேயம் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கிவிட்டதா? இது நகைச்சுவையே அல்ல, மாறாக அவர்களின் மனநலக் குறைபாட்டையும் வக்கிர புத்தியையும் காட்டுகிறது” என்று மக்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DZdUn84zmQ4/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் குவிந்ததைத் தொடர்ந்து, மதுர் விர்லி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தற்காலிகமாக முடக்கியுள்ளார். இருப்பினும், மக்களின் கோபம் இன்னும் தணியவில்லை. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு இந்த இரு நகைச்சுவை கலைஞர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இச்சம்பவம், ‘நகைச்சுவை என்ற பெயரில் பேசுவதற்கான எல்லைகள் எங்கே முடிகிறது’ என்ற புதிய விவாதத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளது.
