தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். மொத்தம் 234 தொகுதிகளில் தவெக 107 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், திமுக கூட்டணி 59 இடங்களுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, ஜனநாயத்தின் மாண்பைக் காக்கும் வகையில் ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தான் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். “நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லியே மக்களிடம் வாக்கு கேட்டோம்; வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்தே நான் நல்லாட்சியை வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது மனச்சாட்சிக்கு உண்மையாக, சக்தியை மீறி உழைத்ததாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தோல்வியிலும் கண்ணியம் குறையாமல், வெற்றி பெற்றவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்த வாக்காளர்களுக்கும், களத்தில் அயராது உழைத்த ‘கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும்’ அவர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தவெக-வின் இந்த விஸ்வரூப எழுச்சி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், மக்கள் நலப்பணிகளில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திமுக தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்பதையும் அவரது அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு நீண்டகால அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக இந்த முடிவை ஏற்பதாக அவர் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
