தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன. விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்பதால், தவெகவின் பலம் 107 ஆகக் குறையும். இந்த இக்கட்டான நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் மேற்கொள்ளப்போகும் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதே இப்போது தமிழக மக்களின் பிரதான கேள்வியாக உள்ளது.
ஆளுநர் முறைப்படி அதிக இடங்களை வென்ற தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பார் என்றாலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது விஜய்க்கு பெரும் சவாலாகவே இருக்கும். தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வைத்துள்ளன. இந்தக் கூட்டணிகளில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறுவதே விஜய்க்கு இருக்கும் ஒரே வழி. குறிப்பாக காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2), மற்றும் சிபிஐஎம் (2) ஆகிய கட்சிகள் கைகோர்த்தால் தவெக எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அல்லது பாமக (4) மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஒரு மாற்று கூட்டணியை உருவாக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், கொள்கை ரீதியாக முரண்பட்ட கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது விஜய்க்கு அத்தனை எளிதான காரியமல்ல. உதாரணமாக, விசிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளும் ஒரே அணியில் இணைவது என்பது தமிழக அரசியலில் “குதிரைக்கொம்பு” போன்ற ஒரு நிகழ்வாகும். அதேபோல், தேமுதிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அவை அமைச்சரவையில் முக்கிய இடங்களையோ அல்லது குறிப்பிட்ட நிபந்தனைகளையோ முன்வைக்கக்கூடும். அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்க முன்வராத சூழலில், கூட்டணி கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க விஜய் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியிருக்கும்.
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நிபந்தனையற்ற ஆதரவு கிடைக்குமா அல்லது அதிகாரப் பகிர்வு அடிப்படையில் கூட்டணி அமையுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். ஒரு கட்சியின் ஆதரவு குறைந்தாலும் ஆட்சி கவிழும் அபாயம் இருப்பதால், மிகவும் நிதானமாகவும் அதே சமயம் வேகமாகவும் விஜய் காய்நகர்த்த வேண்டியுள்ளது. கோட்டையில் தவெக கொடி பறக்குமா அல்லது தமிழகம் ஒரு தொங்கு சட்டசபையைச் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தை உச்சகட்ட பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
