முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங் குறித்து தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் மைதானத்தில் ஹர்பஜன் தன்னை அறைந்த சம்பவத்தை வைத்து, தற்போது அவர் ஒரு விளம்பரத்தில் நடித்து 1 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளதாக ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிருமாறு ஹர்பஜன் கேட்டது தன்னை மேலும் காயப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இந்தச் செயல் குறித்து ஹர்பஜனுக்குப் பதிலளித்த ஸ்ரீசாந்த், “நான் உங்களை மன்னிப்பேன், ஆனால் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று நேரடியாகத் தெரிவித்துள்ளார். யாராவது நமக்குத் தீங்கு செய்தால் அவர்களை மன்னிக்கலாம், ஆனால் அந்தத் தவற்றை மீண்டும் செய்யவிடாமல் இருக்க அதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் விளக்கியுள்ளார். ஹர்பஜனின் இந்த அணுகுமுறை அதற்கு ஒரு சரியான உதாரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.
இருவருக்கும் இடையே இருந்த உறவு தற்போது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜனை முன்பு ‘சகோதரர்’ என்று அழைத்த போதிலும், இந்த விளம்பரச் சம்பவத்திற்குப் பிறகு அவரை இன்ஸ்டாகிராமில் பிளாக் (Block) செய்துவிட்டதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். “அவருக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று மிகத் தெளிவாகத் தனது முடிவை அவர் அறிவித்துள்ளார்.
