மயிலாடுதுறை நீடூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் புதிய பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த இதயத்துல்லா என்பவருடைய 28 வயது மகன் முகமது அப்ரீத் என்பவர் பாஸ்போர்ட் பதிவுக்கு அந்த மாணவியின் செல்போனில் “AirDroid Parental Control” என்ற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறி அந்த செயலியை மாணவியின் செல்போனில் நிறுவியுள்ளார். அந்த செயலியின் ஸ்கிரீன் மிரரிங் மற்றும் கேமரா ஆக்சன் போன்ற அம்சங்களை பயன்படுத்தி முகமது தன்னுடைய செல்போனிலிருந்து அந்த மனைவியின் செல்போன் கேமரா மற்றும் திரை மூலம் அவருடைய தனிப்பட்ட செயல்பாடுகளை மாணவிக்கு தெரியாமல் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு மாணவியின் செல்போனில் வந்த சந்தேகத்திற்குரிய நோட்டிபிகேஷன் மற்றும் விரைவாக சார்ஜ் குறைவது போன்ற அறிகுறிகள் காரணமாக அந்த மாணவிக்கு சந்தேகம் வந்துள்ளது. உடனே பெற்றோரிடம் அவர் இது குறித்து தெரிவித்த நிலையில் உடனே பாதிக்கப்பட்ட மனைவியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட முகமது தவறான செயலியை பயன்படுத்தி அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு நான்கு நபர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளையும் தன்னுடைய செல்போன் மூலம் சட்டவிரோதமாக கண்காணித்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளன.
இந்த சம்பவம் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் தேவையில்லாத மற்றும் நம்பகத் தன்மையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தனிப்பட்ட தரவுகள் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதும் பிரவுசிங் செய்யும் போதும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் செல்போனை கொடுக்கும் போதும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
