தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து ஐந்து மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தன்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு போலீசார் வற்புறுத்தியதாக அவர் தரப்பில் பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, சொந்த ஜாமீனில் உடனடியாக விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆத்தூர் காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், பிணைத் தொகையைச் செலுத்த திருச்செந்தூர் நீதிமன்றத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். பிணை நடைமுறைகளை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “என்னை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என நினைத்துக் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் லண்டன் சென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; ஆனால், சிறைபிடிக்கப்பட்டதால் அவரை நேரில் சென்று வழியனுப்ப முடியாமல் போனது மட்டுமே எனக்கு வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆவேசமாகப் பேசிய அவர், தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியபோது எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள், இப்போது திமுகவை மிரட்டி அழித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த வகையிலாவது அழித்துவிட வேண்டும் என நினைப்பது ஒரு காலத்திலும் நடக்காது. கத்தி என்பது இரு பக்கமும் கூர்மையானது, அது எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வெட்டும் என்பதை அவர்கள் விரைவில் காலத்தால் உணர்ந்து கொள்வார்கள்” என அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
