திருச்சி பெண்களுக்கு குட் நியூஸ்… ஜூலை 1 முதல் சிறப்பு லோன் முகாம்… அரசு தரும் அரிய வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க… உடனே விண்ணப்பியுங்கள்…!!

By Swetha on ஆனி 25, 2026

Spread the love

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு லோன் மேளாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயல் தெரிவித்துள்ளபடி, வரும் ஜூலை 1, 2026 முதல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் இந்த மேளாக்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகச் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த லோன் மேளாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறு கடன், தனி நபர் கடன், கல்வி கடன், கறவை மாடு வாங்குவதற்கான கடன், ஆட்டோ கடன் மற்றும் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மானியக் கடன் எனப் பல பிரிவுகளில் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான முகாம்கள் ஜூலை 1-ல் திருச்சி மேற்கு இராமலிங்க நகர் கிளையிலும், ஜூலை 2-ல் திருச்சி கிழக்கு ஆண்டாள் வீதி கிளையிலும், ஜூலை 3-ல் ஸ்ரீரங்கம் கிளையிலும் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஜூலை 6 முதல் ஜூலை 15 வரை திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி, புள்ளம்பாடி, லால்குடி, முசிறி மற்றும் துறையூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு வங்கிக் கிளைகளில் இந்த மேளாக்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

   

இக்கடனுதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்துடன், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். கல்வி கடனுக்குப் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழும், விவசாயக் கடனுக்குச் சிறு/குறு விவசாயி சான்றும் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அல்லது உள்ளூர் கூட்டுறவு வங்கி அலுவலர்களை நேரில் அணுகலாம்.