சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த செல்லமுத்து (50) என்பவர் தன்னுடைய மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை கள்ளக்குறிச்சி வெள்ளி மலையை சேர்ந்த லட்சுமணன் (45) என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். இதனிடையே கடந்த அக்டோபர் 21ஆம் தேதி செல்லமுத்துவின் மகள் ஜீவா (25) தன் தந்தையிடம் குவாட்டர் மதுபாட்டில் கொடுத்துள்ளார். வேலையை முடித்துவிட்டு செல்லமுத்து அதில் பாதியை குடித்து மீதம் லட்சுமணனிடம் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். பிறகு இருவரும் இரவு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் காலை மது அருந்திய லட்சுமணனுக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் செல்ல முத்துவுக்கும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக மகள் ஜீவாவிடம் போலீசார் விசாரித்த போது அவருடைய அண்ணன் சிவக்குமார் (28) மது பாட்டில் கொடுத்ததாக கூறியுள்ளார். பிறகு சிவகுமாரை அழைத்து விசாரித்த போது நிலப்பிரச்சனையில் தன்னுடைய தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ளார்.
எனவே எங்கு சொத்துக்களை தனக்கு தர மறுத்து மொத்த சொத்துக்களையும் தன்னுடைய தங்கை பெயரில் எழுதி வைத்து விடுவாரோ என்று நினைத்து சொத்துக்களை அபகரிப்பதற்காக தந்தையை கொல்ல திட்டமிட்டு மது பாட்டிலில் ஊசி போடும் சிரஞ்சு மூலமாக விஷம் கலந்து தனது தங்கை மூலமாக தந்தைக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தந்தைக்கு விஷம் கொடுத்து கொள்ள முயன்றதாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகுமாரை கைது செய்துள்ளனர். சொத்து பிரச்சனையில் தந்தைக்கு விஷம் கலந்த மதுவை கொடுத்து மகன் கொலை செய்ய முயற்சித்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
