“650 மார்க் எடுப்பேன்னு சொன்னான்”… மின்விசிறியில் சடலமாக மீட்ட மகன்… நீட் தேர்வால் வந்த விபரீதம்.. கதறும் பெற்றோர்..!!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நீங்குவதற்குள், ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு மருத்துவ ஆர்வலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மேக்வால் என்ற மாணவர், தனது இரண்டு சகோதரிகளுடன் இணைந்து சிகார் நகரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் தங்கி மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், அந்த மாணவர் கடும் மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, தனது சகோதரியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவரது தந்தை, தன் மகன் தேர்வை மிகச் சிறப்பாக எழுதியிருந்ததாகவும், 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று நிச்சயமாக மருத்துவப் படிப்பில் சேருவேன் என்று தன்னிடம் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியிருந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

   

மக்களையும் மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்திற்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மாணவர் பிரதீப்பின் தற்கொலை செய்தி தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதே காரணத்திற்காக கோவா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்திகள் மனதை மிகவும் கலக்கமடையச் செய்வதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.