பீகாரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் போஜ்புரி பாடகர் தனஞ்சய் சர்மா, மேடையில் ஆடிக்கொண்டிருந்த பெண் நடனக் கலைஞர் ஒருவரைத் தூக்கி கூட்டத்திற்குள் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்தச் செயல் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, தனஞ்சய் சர்மா தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், மேடையில் திட்டமிட்டபடி நடனம் ஆடாமல் அந்தப் பெண்கள் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நடனக் கலைஞர்கள் தன்னை மேடையிலிருந்து கீழே தள்ள முயன்றதாகவும், ஒரு பெண் தனது மார்பில் உதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் அவரை வேண்டுமென்றே கூட்டத்தில் வீசவில்லை என்றும், தள்ளுமுள்ளுவில் தவறுதலாக இது நடந்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து பீகார் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முசாபர்பூர் மாவட்ட போலீசாருக்கு இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேடைக் கலைஞர்களின் பாதுகாப்பு மற்றும் ஒரு பெண்ணை பொது இடத்தில் இதுபோன்று கையாண்ட விதம் குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
