பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கர்நாடக இசையை நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பயின்ற இவர், திரைப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு 15 தெலுங்கு படங்களில் நடித்தும், மேடை நாடகங்களில் பங்கெடுத்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், பாடகர் மனோ ஒரு நேர்காணலில், நடிகர் சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் வேண்டுகோளின்படி, கங்கை அமரன் தன்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று சிவாஜி கணேசனிடம் அறிமுகப்படுத்தியபோது, சிவாஜியின் கம்பீரத்தைக் கண்டு கை, கால் நடுங்கியதாகவும் தான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாகவும் மனோ தெரிவித்தார்.
சிவாஜி, “இவனா? எனக்கா பாடுகிறான்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, “இளையராஜா சொன்னால் சரியாகத்தான் இருக்கும், பொழச்சிப் போ” என்று கூறிய மறக்க முடியாத நிகழ்வை அவர் மனம் திறந்து பகிர்ந்தார். மனோ, சிவாஜி நடித்த ‘ஜல்லிக்கட்டு’, ‘தேவர் மகன்’ போன்ற படங்களில் பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
