நடிகை சிம்ரன், தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமானார். டைரக்டர் வசந்த் இயக்கத்தில், சூர்யாவுக்கு முதன்முறையாக ஜோடியாக நடித்தார். அதன்பின் ஜோடி படத்தில், பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சிம்ரன் மிகச்சிறந்த நடனக் கலைஞர் என்பதால், அவரது நடன அழகு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவள் வருவாளா, பம்மல் கே சம்பந்தம், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தவர். விஜய், அஜீத் குமாருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் விஜய் வளர்ந்து வந்த நேரம், 1990களில் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சில படங்களில் விஜய் நடித்து வந்தார். அப்போது விஜய் நடிப்பில் ஒன்ஸ்மோர் படத்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கினார். அந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். வடமாநிலத்தில் இருந்து, தமிழ் சினிமாவுக்கு வந்த புதிது என்பதால் சிம்ரனுக்கு சிவாஜியின் பெருமை, புகழ் எல்லாம் தெரியாது. குறிப்பாக அவரது நேரந்தவறாமை, தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலம். அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு என்றால், அதிகாலை 4.30 மணிக்கே மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் தயாராக இருப்பார் சிவாஜி கணேசன்.
ஒருநாள் ஒன்ஸ்மோர் ஷூட்டிங், சிவாஜி, விஜய் உள்ளிட்ட அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால், படத்தின் நாயகி சிம்ரன், காலை 9.50 மணிக்கு தாமதமாக வந்திருக்கிறார். சிவாஜி கணேசன் அப்படியே ஒரு பார்வை பார்த்திருக்கிறார். டென்சன் ஆன எஸ் ஏ சந்திரசேகர், ஷூட்டிங் பேக்கப் சொல்லி இருக்கிறார். எஸ்ஏசியை அழைத்த சிவாஜி, எதுக்குப்பா டென்சன் ஆகுறே, அந்த பொண்ணு நார்த்ல இருந்து வந்துருக்கு. தமிழ் சினிமாவுக்கு புதுசு. நம்மள பத்தி சரியா தெரியாது. போய் விளக்கமாக சொல்லு என்று கூறியிருக்கிறார். உடனே, சிம்ரனிடம் போய் எஸ்ஏசி பேச, அடுத்த சில நிமிடங்களில் சிவாஜி காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். பிறகு ஒன்ஸ்மோர் ஷூட்டிங் நடந்திருக்கிறது. சிம்ரன் தவறு செய்தாலும் உடனே புரிந்துக்கொண்டு மன்னிப்பு கேட்ட அவரது பண்புதான், தமிழ் சினிமாவில் அவரை தொடர்ந்து நிலைக்க வைத்தது என்று இந்த தகவலை, சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.