“ரஜினி கேட்டிருந்தா அந்த படத்துக்கு நான் இசையமைத்திருப்பேன்…” இளையராஜா ரஜினி ஜோடி பிரிவுக்குப் பின்னால் நடந்த குழப்பம்!

By vinoth on மே 3, 2024

Spread the love

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். அவரின் பயோபிக் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளது. அந்த படத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளார்.

இளையராஜா புகழின் உச்சில் இருந்த போது ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு அவர் இசையமைத்த படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாக அமைந்தன. அதிலும் ரஜினிக்கு அவர் இசையமைத்த மாஸ் மற்றும் சோகப் பாடல்கள் இன்றளவும் பேசப்படுபவைகளாக உள்ளன.

   

ரஜினி – இளையராஜா கூட்டணி வள்ளி திரைப்படத்தோடு முடிவுக்கு வந்தது. ரஜினி பாலச்சந்தர் தயாரிப்பில் அண்ணாமலை படத்தில் நடித்த போது அந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அப்போது பாலச்சந்தர் நிறுவனத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் நிறுவனத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்ற முடிவில் இளையராஜா இருந்துள்ளார்.

   

அதனால் அந்த படத்துக்கு தேவா இசையமைத்தார். அதன் பின்னர் ரஜினி இளையராஜா கூட்டணி அமையவேயில்லை. ஆனால் அதன் பிறகு இளையராஜா அளித்த ஒரு நேர்காணலில் “ரஜினி என்னிடம் கேட்டிருந்தால் அவருக்காக நான் அண்ணாமலை படத்திற்கு இசையமைத்திருப்பேன்” என்று கூறினாராம்.

 

இதே போல ரஜினியும் “நான் வேண்டுமானால் இளையராஜா சாமியிடம் பேசிப் பார்க்கவா எனக் கேட்டுள்ளார். ஆனால் சுற்றியிருந்தவர்கள் ரஜினி என்ன கடவுளே வந்து சொன்னாலும் நான் அந்த படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டதாக அவரிடம் கூறியுள்ளனர். இதனால் ரஜினி இளையராஜாவிடம் அதுபற்றிக் கேட்கவேயில்லையாம். இப்படி ஒரு தவறான தகவல் பரிமாற்றத்தால் ரஜினி- இளையராஜா காம்பினேஷன் முடிவுக்கு வந்துள்ளது.