சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், முதியவர் ஒருவர் கேக் கடைக்குச் சென்று அங்குள்ள கேக்கின் விலையைக் கேட்கிறார். ஒரு சாக்லேட் கேக்கின் விலை 250 ரூபாய் என்று கடைக்காரர் கூற, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதால் அந்த முதியவர் வருத்தமடைகிறார். பின் தயக்கத்துடன் ஒரு பேஸ்ட்ரி கேக்கின் விலையைக் கேட்க, கடைக்காரர் அவரிடம் மிகவும் கோபமாகவும் மரியாதையின்றியும் நடந்து கொள்கிறார்.
“ஏன் ஒவ்வொரு பொருளாக விலையைக் கேட்கிறீர்கள்? இது 70 ரூபாய்” என்று கடைக்காரர் எரிச்சலுடன் கூறுகிறார். அதற்கு அந்த முதியவர், “என்னிடம் பணம் குறைவாக இருக்கிறது, அதனால்தான் கேட்கிறேன்” என்று மிகவும் பணிவாகப் பதில் கூறுகிறார். அப்போதும் அந்த கடைக்காரர் இரக்கமின்றி, “70 ரூபாய்க்கு ஒரு துண்டுதான் கிடைக்கும், முழு டிரேயையும் தூக்கிக் கொடுத்துவிடவா?” என்று ஏளனமாகப் பேசி முதியவரை அவமானப்படுத்துகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், கடைக்காரரின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏழ்மையை ஏளனம் செய்வதும், ஒரு முதியவரிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதும் மனிதநேயமற்ற செயல் என்றும், அடிப்படை மரியாதை கூட இல்லாத இதுபோன்ற நபர்களால் மனிதநேயம் வெட்கித் தலைகுனிவதாகவும் மக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
