தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். ஏற்கனவே ஒரு மூதாட்டியைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியே வந்த முனீஸ்வரன், மீண்டும் இந்த துயர செயலை செய்துள்ளான். திருட்டு மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சுற்றித் திரிந்து, தனியாக வரும் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளான்.
சம்பவத்தன்று தனியாகச் சென்ற மாணவியைத் தலையில் அடித்து மயக்கமடையச் செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுப் படுகொலை செய்துள்ளான். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கொலை செய்த பிறகும் எவ்வித பயமுமின்றி அதே பகுதியில் சுற்றித் திரிந்து, மக்களிடம் வழக்கைப் பற்றிய தகவல்களைக் கேட்டு தெரிந்துள்ளான். சிசிடிவி காட்சிகள் மூலம் இவனைக் கண்டறிந்த காவல்துறை, தற்போது மதுரை சிறையில் அடைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
