மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 25,000 ரூபாயைத் தொட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் தலையீடு மற்றும் சர்வதேச அரசியல் சூழல்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளதாகவும், செபி போன்ற அமைப்புகள் மியூச்சுவல் ஃபண்டுகளில் தங்கம் வாங்க அனுமதி அளித்திருப்பது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 100 முதல் 120 ரூபாய் வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ள அவர், இதுவே தங்கம் விலை உள்நாட்டில் 20% முதல் 30% வரை உயரப் பிரதான காரணமாக அமையும் என விளக்கியுள்ளார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளை விடத் தங்கம் அதிக லாபத்தைக் கொடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் இனி பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கியே அதிகம் நகர்வார்கள் என்றும் கூறியுள்ளார். போர்ச் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் தங்கத்தின் மகுடம் வரும் காலங்களில் மேலும் பிரகாசிக்கும் என்பதே அவரது தற்போதைய கணிப்பாக உள்ளது.
