மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையைத் தடையின்றி பெறுவதற்கு, தற்போது புதிய நடைமுறை ஒன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயன்பெறும் ஒவ்வொரு விவசாயியும் தங்களுக்கென பிரத்யேகமான விவசாய அடையாள எண்ணைப் பெற்றிருப்பது அவசியம் என அரசு அறிவித்துள்ளது.
இந்த அடையாள எண் இல்லாத பட்சத்தில், அடுத்தடுத்த தவணைத் தொகைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் இதனை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அடையாள எண்ணைப் பெறுவதற்கு விவசாயிகள் நீண்ட தூரம் அலைய வேண்டிய அவசியமில்லை.
மேலும் தங்களின் நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகிலுள்ள வேளாண் அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாய அடையாள எண் வழங்கப்பட்ட பின்னரே, தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தவணைத் தொகையான ₹2,000 நேரடியாகச் செலுத்தப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
