கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பட்னல் ஏரியில் இன்று ஆறு பேரின் உடல்கள் மர்மமான முறையில் மிதப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், நீரில் மூழ்கிய நிலையில் இருந்த நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்கள் யார் மற்றும் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர, இவர்கள் குளிக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
